Thursday, March 19, 2009

எது கலிகாலம்???

தினத்தந்தியில் ஒரு கொலை செய்தி.
கலிகாலம் என்றான் என் நண்பன்.
மல்லாக்கப் படுத்து, வரலாற்றைப் புரட்டிப் பார்த்தேன்.
நல்ல காலம் எது என தேடி...

முதல் பக்கத்திலேயே,
மூர்ச்சை அடைந்து போனேன்.
அடுத்த அடுத்த பக்கங்களில்,
அடுக்கு அடுக்காய் கொலைகள்...
பதினைந்து பக்கம் தாண்டி ஓடினேன்...
பக்கத்திற்கு பக்கம் கொலைகள்.
பெண்ணை அடைய சில...
பெண்ணை அடக்கி சில...
பொன்னைத் தேடி சில...
மண்ணை நாடி சில...
நாட்டை பிடிக்க சில...
நாட்டை காக்க சில...
மதத்தின் பெயரில் சில...
இனத்தின் பெயரில் சில...
வீரத்தின் அடையாளமாய் சில...

இப்படி பலப் பல கொலைகள்...
படித்து முடிக்கையில்,
என் கைகளில் ரத்த வாடை...
பாவம் மூட்டை பூச்சுக்குத் தெரியுமா?
தான் இருப்பது கலிகாலம் என??? :)

Wednesday, March 11, 2009

Kalinga porum kalikaala porum

ஆசையே துன்பத்ிற்கு காரணம் என்றான் புத்தன்.
எவனோ ஆசை படுவதற்கு, நான் ஏன் துன்ப பட வேண்டும்?
புத்தரின் சிலை அடியில் ஒரு பாமர இலங்கை தமிழன் கேட்கிறான்,
தன் தாயின் பிணத்தை தன் மடியில் கிடத்திய படி!

புலிகளுக்கும் சிங்கங்களுக்கும் சண்டை.
செத்து மடிந்தன அருகில் இருந்தஆடுகள்...
ஆட்டுக்கு ஒரு நியாயம், சிங்கம் புலிக்கு ஒரு நியாயம் படைத்த இறைவா,
ஆடாய் பிறந்தது ஈழ தமிழனின் பாவம் என்றாள்...
நீயும்ஒரு நாள் ஆடாய் பிறவாய்,
பின் தான் ஆட்டின் வலி அறிவாய்.
இது இந்த ஆட்டின் சாபம்.

உன்னை சொல்லி குற்றம் இல்லை...
வேண்டும் அளவுக்கு இரத்தம் குடித்த பின் தானே,
அசோகனின் மனம் மாற்றினாய்.
இப்போது உன் பசி தீர வில்லையா?
இல்லை, இந்த தமிழர்களின் இரத்தம் போத வில்லையா?
நிறுத்த சொல் இந்த அசோகர்களை...

மறந்து விட்டேன் உன் கதையை.
நீ தான் திட்டினாலும் வாங்கி கொள்ள மாட்டாயே!!!
வேண்டுமானால் மன்றாடி கேட்கிறேன்,
எங்கள் குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லையா?
எங்கள் பெண்களின் கண்ணீர் உன் பாதங்களை நனைக்கவில்லையா?
நான் தனி ஈழம் கேட்டு உன்னிடம் வரவில்லை,
உன் மனத்தின் ஈரம் கேட்டு தான் இங்கு வந்துள்ளேன்.

நான் இப்போது துன்ப படுவது கூட ஆசையினால் தான்!
என் சகோதரன் துன்பம் நீங்க வேண்டும் என்ற ஆசை!!!
என்னால் உன்னை போல் ஆசை துறக்க முடியாது.
ஆசை துறந்து புத்தன் ஆக வாழ்வதை விட,
பிறர் ஆசை நிறைவேற உன்னை வேண்டும்,
பித்தன் ஆக இருக்கவே விரும்புகிறேன்.